Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

CAREER COURSES AFTER 12TH STANDARD


 பிளஸ் 2-க்குப் பிறகு: புதிய பாதை வகுப்போம்!


உங்களது இயல்பும் சமூகத்தின் தேவையும் இணையும் இடமே கல்லூரி. சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அறிவுடனும் திறனுடனும் உங்களைத் தயார் செய்வதே கல்லூரிப் படிப்பின் நோக்கம்.

பத்தாம் வகுப்புவரை, கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக, எந்தப் பிரிவுகளுமற்ற ஒன்றாகவே உள்ளது. அதன்பின் பள்ளிக்கல்வி உயிரியல், கணிதம், கணித உயிரியல், வணிகவியல், தொழில்கல்வி எனப் பிரிகிறது.

மாணவர்களின் உயர்கல்வித் தேர்வு, மேல்நிலைப்பள்ளியில் தேர்ந்தெடுக்கும் பிரிவுகளின் அடிப்படையில்தான் அமைகிறது. மற்றவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலோ நண்பர்களின் தேர்வின் அடிப்படையிலோ கல்லூரிப் படிப்புகளை நீங்கள் தேர்வுசெய்யக் கூடாது. உங்கள் இயல்புக்கும் திறனுக்கும் சமூகத்தின் தேவைக்கும் பொருத்தமான பிரிவைத் தேர்ந்தெடுப்பதே நன்று.

மருத்துவத்தில் பலவிதம்

மருத்துவம் படிப்பது பெரும்பாலான மாணவர்களின் கனவாக இன்றும் உள்ளது. மருத்துவம் படிப்பதற்கு பி.சி.பி.எம் (Physics / Chemistry / Biology / Maths) பிரிவையோ பி.சி.பி. (PCB) பிரிவையோ +2-ல் நீங்கள் தேர்வுசெய்து படித்திருக்க வேண்டும்.

உங்களுக்கு உயிரியல் சார்ந்த படிப்புகளில் இயற்கையான நாட்டமும் +2-ல் நல்ல மதிப்பெண்ணும் இருந்தால், நீங்கள் மருத்துவத்தைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், பி.எஸ்சி. – பார்மஸி, பி.எஸ்சி. – பயோடெக்னாலஜி, பி.எஸ்சி. – டெயிரிடெக்னாலஜி, பி.எஸ்சி. – அகுவாகல்ச்சர் / அக்வாஇன்ஜினீயரிங், பி.நாட். இன்நேச்சுரோபதி & யோகிக்சயின்ஸ், பி.எஸ்.எம்.எஸ் (சித்தா), பி.டி.எஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் ஏதோ ஒன்றைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

பொருத்தமான பொறியியல்

பி.சி.பி.எம் குரூப், பி.சி.எம். (PCM) குரூப் ஆகியவை பொறியியல் பிரிவுக்கு அவசியம் தேவை. பொறியியல் படிப்பு ‘சர்க்கியூட் கோர்சஸ்’ (Circuit Courses), ‘நான்-சர்க்கியூட்கோர்சஸ்’ (Non-Circuit Courses) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைச் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் படிப்புகள்.

மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்தும் ‘நான்-சர்க்கியூட்’ வகைக்குள் அடங்கும். இன்று எந்தப் பிரிவுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்ற அடிப்படையில் படிப்பைத் தேர்வுசெய்வதைவிட நான்கு வருடங்கள் கழித்து எந்தப் பிரிவுக்குத் தேவையிருக்கும் என்ற அடிப்படையில் தேர்வுசெய்வது வருங்காலச் செழிப்புக்கு நல்லது.

ஆர்ட்டிஃபீஷியல் இண்டெலிஜன்ஸ் (Artificial Intelligence) போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய படிப்புகளைத் தேர்வுசெய்து படிப்பது வளமான எதிர்காலத்தை உருவாக்கும். குறிப்பாக ‘Information Science in Engineering’, ‘Information Science and Technology’ போன்றவை.

உங்களுடைய இயல்புக்கு ஏற்ற பிரிவைக் கண்டறிவது இப்போது மிகவும் எளிது. மனோவியல் மதிப்பீடு (psychometric assessment) தேர்வு எழுதுவதன் மூலம் உங்களுக்கு ஏற்ற துறையை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

அறிவியலை அறியலாம்

பி.சி.பி.எம். குரூப், பி.சி.எம் (PCM) குரூப் ஆகியவை அறிவியல் பிரிவில் அடங்கும். பிளஸ் 2-ல் இதைப் படித்தவர்கள் பி.எஸ்சி. – இயற்பியல் / வேதியியல் / கணிதம், பி.எஸ்சி. – என்விரான்மெண்டல் சயின்ஸ் ஆகியவற்றில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

வரவேற்கும் வணிகவியல்

கல்விமுறையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வணிகவியல். வர்த்தகம், நிதி, பொருளாதாரம், வங்கியியல் ஆகியன இந்தப் பிரிவில் அடங்கும். இதைப் படித்தவர்கள் பி.காம்., பி.பி.ஏ., சி.ஏ., பி.எம்.எஸ்., பி.பி.எஸ்., பி.ஏ.ஃப்., சி.எஸ், ஆகியவற்றைப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டுகாலப் படிப்புகள்.
பன்முகக் கலைகள்
அறிவியல், வணிகவியல் ஆகியவை தவிர்த்து ஏனைய அனைத்தும் கலைப்பிரிவில் அடங்கும். சமூக வளர்ச்சிக்கும் மனிதமேன்மைக்கும் தேவையான படிப்புகள் பல இந்தப் பிரிவில் உள்ளன. சட்டப்படிப்பு, அனிமேஷன்-மல்டிமீடியா, ஃபேஷன்டிசைனிங், விஷுவல்ஆர்ட்ஸ், லைப்ரரிஆர்ட்ஸ், பெர்ஃபார்மிங்ஆர்ட்ஸ், ஏவியேஷன் & ஹாஸ்பிட்டல் மேனஜ்மெண்ட், ஹோட்டல் மேனெஜ்மெண்ட், ஃபிலிம் & மாஸ்கம்யூனிகேஷன், மொழிப்படிப்புகளான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், சமூகப் பணி, கவின்கலை ஆகியனவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

சரியான தேர்வு முக்கியம்

தற்போது ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிப்படிப்பின் இறுதிக்கட்டமான இந்தத் தேர்வே, அவர்களின் வாழ்வின் ஏற்றத்துக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும், இந்தத் தேர்வுக்குப் பின்வரும் விடுமுறையை அவர்களது வாழ்வின் முக்கிய தருணம் எனச் சொல்லலாம். ஆம்.
அடுத்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் காலகட்டம் அது. அவர்களின் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கும் காலகட்டம் அது. உங்களது இயல்புக்கும் திறனுக்கும் விருப்புக்கும், சமூகத் தேவைக்கும் ஏற்ற படிப்பைத் தேர்ந்தெடுத்தால், வாழ்வு இனிமையானதாக மட்டுமல்லாமல்; வளமிக்கதாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...