Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ!

GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்தவரை பல மாதிரி தேர்வை எழுதுவது சிறந்தது ஆகும். இது, தவறுகளில் கவனம் செலுத்தவும் தேர்வின் போது நேரத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.

காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) நடத்தும் பொறியியல் பட்டதாரி திறனாய்வு தேர்வு (GATE 2022) வரும் பிப்ரவரி 5,6,12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வானது உயர் பொறியியல் நிறுவனங்களில் முதுகலை திட்டத்தில் மாணவர்களை சேர்க்க மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படுகிறது.

இதற்கான நுழைவுச் சீட்டு ஜனவரி 3, 2022 அன்று வெளியிடப்பட்டது.

GATE தேர்வு மிகவும் கடினமானது என்கிற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், முந்தைய ஆண்டுகளில் முதலிடம் பெற்றவர்கள் சரியான மனநிலை மற்றும் உறுதியுடன் இருந்தால், இந்த தேர்வு கடினம் கிடையாது. GATE 2022ஐ எளிதாக வெல்ல டாப்பர்கள் வழங்கிய டிப்ஸ்களை கீழே காணுங்கள்

என்ன தேர்வனு ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கோங்க:

GATE என்பது தேசிய அளவிலான தேர்வு என்பதை அனைத்து தேர்வர்களும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அப்போது தான், படிப்பதற்கு இறங்கும் முன்பு மனதளவில் தங்களை தயார் படுத்திட முடியும். GATE 2022 தேர்வு முறை, தேர்வுத் திட்டம் ஆகியவற்றை அறிந்துகொண்டதால், தேர்வுக்கு எளிதாக தயாராகிட முடியும்

GATE 2022 பாடத்திட்டம்

GATE பாடத்திட்டத்தை குறித்த புரிதல் முதலில் வேண்டும். ஒரு வெள்ளை தாளை எடுத்துக்கொண்டு, இரண்டு செக்ஷனாக பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு சைடில், கடினமான பாடங்கள் குறித்த விவரங்களையும், மற்றொரு சைடில் எளிதான பாடங்கள் விவரங்களையும் பதிவிட வேண்டும். இது பாடத்திட்டத்தை நன்கு பகுப்பாய்வு செய்ய உதவுவதோடு, தயாரிப்பு செயல்முறைக்கு உறுதியான திட்டமிடலையும் வழங்கிடும்.

டாபிக்கை பிரித்துகொள்ளுங்கள்

நேர அட்டவணை மற்றும் படிக்க தொடங்குவதற்கு முன்பு, ஒரு கடினமான தலைப்பை ஒரு எளிதான பாடத்துடன் இணைத்து படித்துக்கொள்ள வேண்டும். இரண்டிற்கும், 15 நாள்கள் படிக்க ஒதுக்கீடு செய்யுங்கள். பின்னர், 6 முதல் 7 முறை ரிவைஸ் செய்துகொள்ளுங்கள். இந்த முறையிலே அனைத்து பாடங்களையும் பின்பற்றுங்கள்

முந்தைய ஆண்டு பகுப்பாய்வு

பழைய GATE தேர்வின் வினாத்தாள்களை சேகரித்துக்கொள்ளுங்கள். கேள்விகளின் வடிவமைப்பைப் புரிந்து கொள்ள அனைத்து வினாத்தாள்களையும் முழுமையாக பகுப்பாய்வு செய்யவும். GATE பெரும்பாலும் கருத்தாக்கம் மற்றும் எண் அடிப்படையிலான கேள்விகளை உள்ளடக்கியது என முந்தைய தேர்வர்கள் கூறுகின்றனர்.

படிக்கும் முறை

தினமும் குறைந்தது 5-6 மணிநேரம் படிக்க வேண்டும்.கருத்துகளைக் கற்கவும், எண்களைப் பயிற்சி செய்யவும், பாடங்களை ரிவைஸ் செய்திடவும் உங்கள் நேரத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்

பாடப்புத்தகங்கள்

அட்வான்ஸூடு நூல்களைப் படிக்கத் திட்டமிடும் முன், அனைத்து கருத்துகளையும் கொண்ட ஒரு GATE 2022 புத்தகத்தைக் கண்டறியுங்கள். பாடப்புத்தகத்தை சில முறை படித்து, அதிலிருந்து விரிவான குறிப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள். நிலையான புத்தகங்களில் இருந்து அனைத்து தலைப்புகளையும் முழுமையாக படித்தப்பிறகு, அட்வான்ஸ்டு பாடப்புத்தகங்களு செல்வது சிறந்த சாய்ஸ் ஆகும்.

மாதிரி தேர்வுகள்

Gate மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்தவரை பல மாதிரி தேர்வை எழுதுவது சிறந்தது ஆகும். இது, தவறுகளில் கவனம் செலுத்தவும் தேர்வின் போது நேரத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.

GATE வினாத்தாள்கள்

GATE 2022-ஐ கிராக் செய்வதற்கான கடைசி நிமிட உத்தியானது, விண்ணப்பதாரர்கள் வழக்கமான பயிற்சி மற்றும் GATE முந்தைய ஆண்டு வினாத்தாள்களை செக் செய்ய வேண்டும். உங்கள் தயாரிப்பு மற்றும் கடின உழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாணவர்கள் அச்சமின்றி GATE தேர்வின் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

GATE 2022 தேர்வானது M.Tech-இல் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. GATE 2022ல் மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட 65 கேள்விகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Integrated Courses After +2


 பிளஸ் 2-வுக்குப் பிறகு: ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு (Integrated courses) நல்லதா?

ஓர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, அதையொட்டி முதுகலைப் பட்டப் படிப்பைத் தனியாகப் படித்து வந்ததே காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. புத்தாயிரத்துக்குப் பிறகு ‘கன்கரன்ட் பாடத்திட்டங்கள்’ சில பல்கலைக்கழகங்களில் அறிமுகமாயின. ஒரு கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ படித்துக்கொண்டு தொலைதூரப் படிப்பாக இன்னொரு பட்டப் படிப்பையோ பட்டயப் படிப்பையோ படிக்க வசதியாக இந்தப் படிப்பு அறிமுகமானது.
ஆனால், அதில் ஏற்பட்ட குளறுபடிகளால் அந்தப் படிப்பு விரைவிலேயே மூடுவிழா கண்டது. அதன்பிறகு அறிமுகமான படிப்புகள்தாம் ‘ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள்’. இந்தப் பட்டப்படிப்பு நல்லதா?
பிளஸ் டூவை முடித்த பிறகு இளங்கலை பிறகு முதுகலை (3+2 ஆண்டுகள்) என்ற நடைமுறைக்கு மாறாக, படிப்பைத் தொடங்கும்போது முதுகலைப் படிப்பையும் உறுதிசெய்யும் படிப்புதான் இது.
ஒவ்வொரு படிப்பைப் பொறுத்தும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளின் காலம் மாறுபடுகிறது. 4 முதல் 7 ஆண்டுகள் வரையிலும்கூட ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகியவற்றில் 5 அல்லது 4 ஆண்டு காலப் படிப்பாக ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன
சாதகம் என்ன?
காலங்காலமாகப் படித்துவந்த நடைமுறைக்கு மாறாக இந்தப் படிப்பைப் படிப்பது நல்லதா, கெட்டதா? “பெரிய பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கே இந்தப் படிப்பு கிடைக்கிறது. மற்ற படிப்புகளைவிட இந்தப் படிப்புக்குப் போட்டி குறைவு; கட்-ஆப் குறைவு.
நன்கு பரிச்சயமான பல்கலைக்கழகங்கள் இந்தப் படிப்பை வழங்குவது சாதகமான விஷயம். ஒருங்கிணைந்த படிப்புகளைப் படிப்பது தவறு அல்ல. இந்தப் படிப்பைப் படிப்போர், வளாக நேர்காணலிலேயே வேலைக்குத் தேர்வாகிவிடவேண்டும்” என்கிறார் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்று நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது இளங்கலை படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிடுகிறார்கள். ஒருங்கிணைந்த படிப்பைப் படித்தவர்கள் அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அதிகப்படியான கல்வித் தகுதியாக நினைத்து வேலை கிடைக்காமல் போகும் அபாயம் உண்டு.
“எம்.எஸ்சி. எம்.டெக்.கில் ஒருங்கிணைந்த படிப்புகளை படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கு வருவது கஷ்டமாகிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் வேலைக்கு எடுக்கும்போது 4+2 ஆண்டுகள் படித்தவர்களைத்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு படித்தவர்களைப் பரிசீலிப்பதில்லை.
ஒருவர் அறிவியலில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பைப் படிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் எம்.எஸ்சி. படித்துவிட்டு எம்.டெக். பண்ணலாம். அப்படிப் படித்துவிட்டு ஆசிரியர் பணிக்குப் போகும்போது கல்வித் தகுதி பற்றிய கேள்வி எழுகிறது. ஆசிரியர் பணிக்குப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
வேறு வேலையை எதிர்நோக்கிப் படிப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம். ஆனால், வளாக நேர்காணலிலேயே தேர்வாகிவிட வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
எப்படித் தேர்வு செய்வது?
இந்தப் படிப்பைத் தேர்வுசெய்யும் மாணவர்கள் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டி ருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகமோ தன்னாட்சிக் கல்லூரிகளோ எதுவாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை மேம்படுத்தும் கல்வி நிறுவனங்களைத் தேர்வுசெய்வதே நல்லது.
படிப்பில் சேரும்போது உள்ள தொழில்நுட்பத்துக்கும் படித்துவிட்டு வெளியே வரும்போது உள்ள தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இதை மனத்தில் வைத்து, உரிய தொழில்நுட்பங்களைப் பாடத்திட்டங்களில் அவ்வப்போது புகுத்தும் கல்வி நிறுவனங்களில் சேர முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.
“ஒரே கல்லூரியில் ஒருங்கிணைந்த படிப்பைப் படிக்கும்போது அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இதுவே இளங்கலையை ஒரு கல்லூரியிலோ முதுகலையை வேறொரு கல்லூரியிலோ படித்தால் வெவ்வேறுவிதமான உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல இளங்கலையில் ஒரு படிப்பைத் தேர்வுசெய்து படித்தால், அதன் பிறகு யோசித்து முதுகலையில் இன்னொரு படிப்பில் சேரலாம். ஆனால், ஒருங்கிணைந்த படிப்பில் தொடக்கத்திலேயே முதுகலைப் படிப்பை முடிவு செய்துவிடுவதால், வேறோரு படிப்பை இடையில் யோசிக்க முடியாது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கா. கார்த்திகேயன்.
வழக்கமாக 10+2+3+2 அல்லது 10+2+4+2 என்று உயர்கல்வியைப் படிப்பவர்களைத்தான் தொழிற் நிறுவனங்கள் வேலைக்குத் தேர்வு செய்கின்றன. ஒருங்கிணைந்த படிப்புகளைப் படித்துவிட்டுச் செல்லும்போது வாய்ப்பு கொஞ்சம் குறைகிறது என்பதே யதார்த்தம். அதற்காக ஒருங்கிணைந்த படிப்புகளைப் படிப்பது தவறு என்று அர்த்தம் கிடையாது.
இந்தப் படிப்பைப் படித்தவர்கள் மத்திய மாநிலத் தேர்வாணையங்கள் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்க முடியும். இந்தப் படிப்பைப் படிப்போர் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பைப் உறுதி செய்வது நல்லது என்பதை மறந்துவிடக் கூடாது.
எங்கெல்லாம் படிக்கலாம்?
ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் மத்திய பல்கலைக்கழங்களில் வழங்கப்படுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் போன்றவையும் இந்தப் படிப்பை வழங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. எலெக்ட்ரானிக்ஸ் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாக வழங்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் லைப் சயின்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் சில குறிப்பிட்ட படிப்புகள் சில பல்கலைக்கழங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
நன்றி: இந்து தமிழ்

Decision Making


 முடிவெடுக்கக் கற்றுக்கொள்வோம்!

(Decision making)

வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை. புதிய புதிய நிகழ்வுகளும், தொடர்புகளும், இன்பமும், துன்பமும், குழப்பமும், மகிழ்ச்சியும் மாறி மாறி பின் தொடரும் நிலையில் தான் உள்ளது. புதிய இடங்கள், கடந்த கால நினைவுகள், நட்புகள் என வாழ்க்கை எதோ ஒன்றை எப்போதும் கற்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

நல்லவையும், கெட்டவையும் நம் முன்னால் நமக்கு தெரிந்தவாறே இருக்கின்றன. அதனை தேர்ந்துகொள்வதும், தேர்ந்துகொள்ளாததும் நம் உரிமை என்றாலும், அதனை நமக்கானதாக்கிக்கொள்வது பல நேரங்களில் நமக்கு விருப்பப்படாமலே நிகழ்ந்துவிடுகின்றது என்பதுதான் உண்மை. காலமும், சூழ்நிலைகளும் நாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டெ இருக்கிறது.

காரணிகள்

தேர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் நமதாக இருந்தாலும், அதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தாக்கம் அதிகமான பங்கினை வகிக்கிறது. தெளிவாக, சுயமாக முடிவெடுப்பவர்கள் சுற்றி இருப்பவர்களைக் குறித்து தெளிவுடன் இருப்பதால், தங்கள் தேர்வுகளை சிறப்பாக அமைத்து, வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி விடுகின்றனர். ஆனால் இப்படி முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே.

தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்களின் எண்ணங்களையே தனது முடிவுகளாகக் கொண்டவர்கள், முடிவுகள் தவறானவுடன் சுற்றி இருப்பவர்களைக் குறை கூறுபவர்களாக இருக்கிறார்கள். முடிவெடுப்பதில் பல காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது தேவைகள் குறித்த கடந்த கால, எதிர்காலங்கள். முடிவெடுக்கும் சூழ்நிலையில் உள்ள கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் என யாவும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுப்பதற்கு துணை புரிகிறது. அதனால் விளையும் நன்மைகள், பாதிப்புகள் என அனைத்தையும் சிந்தித்துதான் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.

ஆனால் எல்லோரும் இதே போன்று சிந்தித்து முடிவெடுப்பதில்லை. அந்த நேரத்தில் என்ன நினைவில் இருக்கிறதோ அதனை மையமாகக்கொண்டு முடிவெடுத்து, அதன் வழியில் சென்றே முடிவுகளை மாற்றிக்காட்டுபவர்களும் உள்ளனர். எடுத்த முடிவில் இறுதி வரை நிலைத்திருப்பதும் அல்லது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து முடிவினை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதும், ஒருவரின் தனிப்பட்ட திறமை.

வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

சிறு சிறு முடிவுகளையும் நாமே எடுத்து பழக வேண்டும். உதாரணத்திற்கு உணவகத்திற்கு செல்கிறோம் என்றால், "நீங்களே சொல்லுங்கள், நீங்களே சொல்லுங்கள்" என ஒருவர் மற்றொருவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் இருவரும் ஒரே உணவை பெற்று உண்பார்கள். தங்களுக்கு பிடித்த உணவு குறித்த ஆசை மனதில் இருந்தாலும், மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற குழப்பத்திலேயே தனக்கான தேவையை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்து, உண்ணும் உணவின் சுவையை நாவில் உணர மாட்டார்கள்.

இதே போன்றுதான் முடிவுகள் எடுக்கும்பொழுதும் தனக்கான சரியான தேவையை உணராமல், அடுத்தவரின் முடிவுகளை ஆராயாமல் தனதாக்கிக்கொள்ளும்போதும் நேரிடும். எடுக்கும் முடிவுகளுக்கு தானே பொறுப்பு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், பின்னோக்கி வராமல் முயற்சியோடு, தளராமல் முடிவுகளின் பாதையில் வெற்றி காண வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு என்பதை முழுதாக உணர்ந்தாலே போதும். முடிவுகள் எடுக்கும்பொழுது பெரும் மனக்குழப்பத்திற்குள்ளாகாமல், தெளிந்த நிலையில் ,எடுத்த வேலையில் வெற்றி தரும் முடிவினை எடுக்கலாம்.

பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்?


 பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்?


மேல்நிலைக் கல்வியில் எதைப் படிப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது என்று 10ம் வகுப்பு படிப்பை முடித்த மாணவர்களில் பலபேர் சொல்வதை கேட்டிருப்போம்.

இதில் நமக்கெல்லாம் பெரிதாக ஆச்சர்யம் எழுவதில்லை. சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, தங்களின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற வித்தை, 90% மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில், நமது சமூக சூழல் அப்படி இருக்கிறது. நாம், மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்க விடுவதில்லை மற்றும் தூண்டுவதில்லை.

இக்கட்டுரை, மாணவர்கள், தங்களுக்குப் பொருத்தமான வழியை தேர்வுசெய்துகொள்ள உதவுகிறது.

விருப்பங்களை ஆய்வுசெய்தல்

மேல்நிலைக் கல்விக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்தலென்பது, பாறைகளோடு மோதுவதல்ல என்பதை மாணவர்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை, தொடர்ச்சியான காலங்களில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிவரும் சூழலில், ஒரு மாணவர், ஒற்றை வழியிலேயே செல்வதைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.

10ம் வகுப்பு முடித்தவர்கள், முதலில் தங்களின் விருப்பம் எது என்பதை தெளிவாக ஆய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதற்கு வாய்ப்பு அதிகம் மற்றும் எதற்கு வாய்ப்பு குறைவு என்பதைப் பற்றி சிந்தித்து அறிய வேண்டும்.

ஒருவர், உயர்கல்வியில் ஆர்க்கிடெக்ட் படிக்க வேண்டுமானால், அவர் பள்ளி மேல்நிலைப் படிப்பில், வேதியியலையோ அல்லது உயிரியலையோ படிக்க வேண்டியதில்லை. ஒருவர் எதிர்காலத்தில் தத்துவம் படிக்க விரும்பினால், அதற்கு கட்டாயமாக கணிதத்தையோ அல்லது வணிகவியலையோ படிக்க வேண்டியதில்லை. எனவே, எதைப் படிப்பதற்கு எதை தேர்வுசெய்ய வேண்டும் என்பதை தெளிவான ஆய்விற்கு பிறகே முடிவுசெய்ய வேண்டும்.

சைக்கோமெட்ரிக் தேர்வு

பத்தாம் வகுப்பு நிறைவுசெய்த மாணவர்கள், வாய்ப்பிருந்தால், சைக்கோமெட்ரிக் எனும் ஒரு தேர்வில் பங்கேற்பது நல்லது. அத்தேர்வின் மூலமாக, தமக்கேற்ற துறை மற்றும் படிப்பை அவர்கள் அறிந்துகொள்ளலாம். அதேசமயம், இத்தேர்வை, பத்தாம் வகுப்பிற்கு முன்னதாகவே மேற்கொள்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில், அச்சமயத்தில், ஒருவரின் முதிர்ச்சித் திறன் போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை.

ஒரு நல்ல சைக்கோமெட்ரிக் தேர்வென்பது, பல்வேறான ஆப்ஷன்களை வடிகட்டி, முக்கியத் துறைகள் அல்லது பிறவற்றிலுள்ள சாத்தியமுள்ள தொழில் வாய்ப்புகளைப் பற்றி சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு மாணவருக்கு வரலாற்றுத் துறையை தேர்வுசெய்ய மிகவும் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அவரால் தேதிகளை நினைவில் வைக்க முடியாமல் போகலாம்.

இந்த ஒரு குறைபாட்டை மட்டுமே வைத்துக்கொண்டு, அவரால் அத்துறை சார்ந்து எதையும் படிக்க முடியாது என்பது அர்த்தமல்ல. அவர், வரலாறு தொடர்பான இதர துணைநிலைப் படிப்புகளை மேற்கொள்ள முடியும்.

விசேட குணத்தை கண்டறிதல்

ஒருவர் ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றதனாலேயே, அவர் அப்படிப்பு சம்பந்தப்பட்ட துறையில் பெரியளவில் சாதிப்பதற்கு சிறப்பான தகுதியுடையவர் என்பது அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, சமூக அறிவியல் பாடத்தைப் பற்றி எந்தவித கூடுதலான தேடுதலோ, ஆய்வோ மற்றும் ஆர்வமோ இல்லாத ஒருவர், அப்பாடத்தில் மனப்பாட முறையில் 100% மதிப்பெண் பெற்றிருப்பார். அதை வைத்து, அவர் வரலாறு, குடிமையியல் மற்றும் புவியியல் ஆகிய துறைகளில் சிறப்பாக சாதிக்க வல்லவர் என்பதை கட்டாயமாக முடிவுசெய்ய இயலாது.

அதேபோன்று, ஒரு மாணவர், கணிதப் பாடத்தில் 100% மதிப்பெண்களைப் பெற தவறியிருக்கலாம். வெறும் 75% மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருக்கலாம். ஆனால், 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களைவிட, அவர் கணிதத்துறையின் புதிய பரிணாமங்கள் பற்றி சிந்திப்பவராக இருப்பார்.

தன்னை நன்கு அறிந்த சிலரிடம் கருத்துக் கேட்பதில் தவறில்லை. தனக்கு எது ஒத்துவரும் என்பதைப் பற்றி, நல்ல விபரமான நபர்களிடம் ஆலோசனையும் கேட்கலாம். இதன்மூலம் ஒருவர் சரியான முடிவெடுப்பதற்கு தேவையான உதவிகளைப் பெறலாம்.

ஒரு துறையை ஆய்வுசெய்தல்

ஒரு குறிப்பிட்ட துறையில்தான் உயர்கல்வி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தால், அத்துறையின் எதிர்காலம் பற்றி நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்க வேண்டும். அத்துறையில் தற்போது பணிபுரிவோர், உயர்ந்த மட்டத்தில் இருப்போர் மற்றும் அத்துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடி நிலவரத்தை கணிக்க வேண்டும்.

தொழில்துறை மற்றும் புரபஷனல் அசோசியேஷன்கள் மூலமாக மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கும் சென்று தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்திற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க. 

வேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்!


 வேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்!


ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான திலிருந்தே மாணவர்களும் கல்வி நிலையங்களும் ஒருசேர பரபரப்பாகி விடுகின்றனர். கல்லூரிப் படிப்பென்பது வெறுமனே கற்றலுக்கானது மட்டுமன்று... வேலைவாய்ப்பு, சம்பளம் என வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்கானது. எந்தப் படிப்பினைத் தேர்வுசெய்து படித்தால் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும், என்னென்ன படிப்புகளுக்குத் துணைப் படிப்பாகக் கூடுதல் பாடங்களையும் படிக்க வேண்டும் என்பன குறித்து வேலைவாய்ப்பு நிறுவனங்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித் தோம். இதுதொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியுடன் பேசினோம்.

படிப்பைவிடத் திறன்களே முக்கியம்

‘‘பொறியியல் படித்த மாணவர்கள் பலரும் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள் என்பதுபோன்ற ஒரு தோற்றம் இப்போது நிலவுகிறது. இது உண்மையில்லை. பல நிறுவனங் களில் வேலை பார்ப்பதற்கு இன்ஜினீயர்கள் தேவை. ஆனால், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கொண்ட மாணவர்கள் கிடைப்பதில்லை என்பதே பெரிய குறையாக இருக்கிறது. கல்லூரிப் படிப்பைத் தாண்டி அந்தந்தத் துறைசார்ந்த திறன் வளர்க்கும் படிப்பினைப் படித்திருக்க வேண்டும் என வேலை தரும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

நாம் மூன்றாவது தொழிற் புரட்சியை நோக்கிச் செல்கிறோம். உலகம் முழுக்க பொறியியல், அறிவியல் தொடர்பான பாடத் திட்டங்கள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டுவருகின்றன. இதற்கேற்ப மாணவர்கள் பாடத் திட்டத்தைத் தாண்டி, வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டால், 2020-க்குப்பிறகு வேலை கிடைக்கும் என்று எச்சரிக்கிறது உலக வர்த்தக நிறுவனம்.

இந்த ஆபத்திலிருந்து சிக்காமல் தப்பிக்க வேண்டுமெனில், மாணவர்கள் தங்கள் திறன் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தைவிடவும், திறமையில்லாத நிலைதான் அதிகமாக உள்ளது. எனவே, திறமையை வளர்த்துக்கொள்வதில் முதல் கவனத்தைச் செலுத்தவேண்டும்.

கல்வி நிலையங்களுமே மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருவதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். முக்கியமாக, பொறியியல், கலைப் படிப்பு என்று பிரித்துப் பார்க்காமல், அனைத்து மாணவர்களும் படிக்கிற காலத்திலேயே இன்டர்ன்ஷிப் என்று சொல்லப்படும் தொழில் பயிற்சி பெறுவது அவசியம்.இது எதிர்காலத்தில் சுலபமாக வேலை கிடைக்க உதவும்” என்றார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்தெந்தத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும், அதற்கு எந்தெந்தப் படிப்பினைத் தேர்வு செய்யலாம் எனப் பல கல்வியாளர்களும், கன்சல்டன்சி நிறுவனங்களும் ஆய்வுசெய்து கணித்த படிப்புகள் இனி...

🔹 அனிமேஷன் சார்ந்த படிப்புகள்

மோஷன் பிக்சர்கள் முதல் மொபைல் செயலிகள் வரை பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் அனிமேஷன். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் புதிதாக உருவாக்கப்பட விருக்கும் பொருள்களுக்கு முன்வடிவம் கொடுத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனிமேஷன் உதவுகிறது.

மருத்துவம் முதல் பொழுதுபோக்கு வரை அனைத்துத் துறைகளிலும் அனிமேஷனின் பங்கு இன்று இன்றியமையாததாக மாறிவிட்டது. முன்பு தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தான் அனிமேஷன் பெரிய அளவில் தேவையாக இருந்தது. ஆனால், இன்றோ அனைத்துத் துறைகளிலும் அனிமேஷன் தேவை இருக்கிறது. உதாரணமாக, செல்போன் விளையாட்டுகள் என்பவை முழுக்க முழுக்க அனிமேஷனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படு கின்றன.

முன்பு, ஓர் இடத்தை நேரில் சென்று பார்க்க முடியும். அல்லது அந்த இடத்தின் போட்டோவைப் பார்த்து, அந்த இடத்தைப் பார்த்ததற்கான திருப்தியைப் அடையலாம். ஆனால், இன்றைக்கோ விர்ச்சுவல் ரியாலிட்டி (VR), ஆக்மென்டட் ரியாலிட்டி (AR), 3டி (3D) போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இந்தத் தொழில் நுட்பங்கள் ஓர் இடத்தை நேரில் பார்க்கும் திருப்தியை நமக்கு அளிப்பதால், இந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

அனிமேஷன் படிப்புகளுடன் வி.எஃப்.எக்ஸ் (VFX) சார்ந்த திறனையும் வளர்த்துக் கொண்டால், நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு. இன்று ஆண்ட்ராய்டு மொபைல் வளர்ச்சி பெருமளவில் உள்ளது. அதே அளவில், ஆண்ட்ராய்டு செயலிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. அந்த செயலிகளை உருவாக்கு வதற்கான புரோகிராமிங் தெரிந்தவர்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது. இதற்கு ‘கோட்லின்’ (Kotlin) என்கிற புதிய புரோகிராமிங் லாங்வேஜ் பயன்படுத்தப்படுகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகள் இனிவரும் காலங்களில் அதிகமாக உருவாகும். தற்போது 6டி (6D) வரை தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. எனவே, இந்தத் துறையில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

சில கல்லூரிகளில் பட்டப்படிப்பாக அனிமேஷன் படிப்பு உள்ளது. ஆனால், இன்று பலரால் இணையம் வழியாகவே அனிமேஷன் கற்றுத் தரப்படுகிறது. அனிமேஷன் தொடர்பான படிப்பினைப் படித்தால், இனிவரும் காலத்தில் வேலை கிடைப்பதற்கு நிறைய வாய்ப்பு உண்டு!

🔹 கம்பெனி செகரட்டரி (CS)

இது வர்த்தகத்துக்கான யுகம். தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் அரசின் பல்வேறு சட்டவிதிமுறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டி யிருப்பதால், கம்பெனி செகரட்டரியின் உதவி மிகவும் தேவையாக இருக்கிறது.

அடிப்படை நிலை, நிர்வாக நிலை, தொழில் முறை நிலை என மூன்று நிலைகள் இந்தப் படிப்பில் உள்ளன. ப்ளஸ்டூவில் எந்தப் பாடப் பிரிவினைப் படித்திருந்தாலும் இந்த கம்பெனி செக்ரட்டரி படிப்பினைப் படிக்கலாம்.

ரூ.5 கோடியும், அதற்கு மேலும் செலுத்தப்பட்ட மூலதனம் (paid capital) உள்ள கம்பெனிகள் கட்டாயம் ஒரு கம்பெனி செகரட்டரியை நியமிக்க வேண்டும்; பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒரு கம்பெனி செகரட்டரியை நியமிக்க வேண்டும் என அரசின் விதிமுறைகள் இருப்பதால், இந்தப் படிப்பினைச் சிறப்பாகப் படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது நிச்சயம்.

இந்தப் படிப்பில் ஆண்டு முழுவதும் எந்த நாளிலும் சேர முடியும். தமிழகம் முழுக்க இருக்கிற மண்டல அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் நடக்கும் நேர்முக வகுப்பில் சேர்ந்தும், அது முடியாதவர்கள் தபால்மூலமாகவும் படிக்கலாம்.
ஓர் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டுமுறை தேர்வு நடக்கும் என்பதால், நன்கு படிக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து இதில் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பினைப் பெற வாய்ப்புண்டு.

இந்தப் படிப்பினைப் படிக்க விரும்பும் மாணவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தி இன்ஸ்ட்டியூட் ஆஃப் கம்பெனி

செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா (The Institute of Company Secretaries of India, Southern India Regional Office) அலுவலகத்துடன் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம்!

🔹 நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ்

மருத்துவப் படிப்பு என்றால் எம்.பி.பி.எஸ் மட்டும்தான் என்று நாம் பார்க்கிறோம். ஆனால், அதைத் தாண்டியும் பல்வேறு மருத்துவப் பிரிவுகள் உள்ளன.

பல் மருத்துவம், கால்நடை மருத்துவம்தான் எம்.பி.பிஎஸ்-க்கு அடுத்தபடியாகப் பலரும் கால்பதிக்கும் இடமாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இருப்பது, நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ். இந்தப் படிப்புக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

தற்போது மக்களிடத்தில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் சார்ந்த விழிப்புஉணர்வு அதிகரித்துள்ளது. ஆங்கில மருத்துவ முறைகளைத் தாண்டி, பக்கவிளைவுகள் அற்ற மருத்துவ முறைகளைத் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. அதற்காக யோகா உள்ளிட்ட இயற்கையான பல்வேறு முறைகளை நாடி வருகின்றனர்.

நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ் படிப்பதற்கு ‘நீட்’ (NEET) தேர்வு கிடையாது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்பினைப் பொறுத்தவரை, பல்வேறு டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப்பிரிவுகள் உள்ளன.

ஆனால், இந்தப் படிப்பு எம்.பி.பி.எஸ் போன்று ஐந்தரை ஆண்டுகள் படிக்கக்கூடியது. எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நிகரான படிப்பாக இது கருதப் படுகிறது. இந்தப் படிப்பினைப் படித்தவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு கற்றுத் தரப்படுகிறது. சில தனியார் கல்லூரிகளும் இந்தப் படிப்பினைக் கற்றுத் தருகின்றன!

🔹 வர்த்தகக் கலைப் படிப்புகள்

கடந்த கால் நூற்றாண்டாக அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இப்போது அந்தப் படிப்புகளுக்கான வரவேற்பு சற்றுக் குறைந்து, வர்த்தகப் படிப்புகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், வங்கித் துறை, இன்ஷூரன்ஸ் துறை, மியூச்சுவல் ஃபண்ட் துறை எனப் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்தத் துறையின் சேவை முன்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்காத நிலை இருந்தது. காரணம், உலகம் முழுக்க உள்ள மக்களை நேரடியாகச் சென்றடைவது சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால், இன்றோ நிதித் துறைகள் அனைத்துமே கணினிமயமாகிவிட்டன. இன்டர்நெட் வசதி எல்லோருக் கும் கிடைக்கிறது. இதனால் அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை வழங்குவது இன்றைக்கு நூறு சதவிகிதம் சாத்தியமான விஷயமாக மாறியிருக்கிறது.

மேலும், பணம் படைத்தவர்கள் மட்டுமே நிதித் துறை தரும் சேவைகளைப் பெற்றுவந்தனர். ஆனால், இன்றைக்கோ அனைவருமே இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்ற நிதிச் சேவையைப் பெறத் தயாராகி விட்டனர். இந்த நிலையில், வர்த்தகக் கலைப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

நிதித் துறையில் பணி செய்வதற்கு அடிப்படையானவை இளங்கலை மூன்றாண்டுப் படிப்புகளான பி.காம், பி.பி.ஏ மற்றும் பி.ஏ பொருளாதாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள்தான். இந்தப் படிப்பினைப் படிக்கிற மாணவர்கள் இன்டர்நேஷனல் பிசினஸ் (Export & Import), லாஜிஸ்ட்டிக்ஸ், பிசினஸ் அனாலிடிக்ஸ், டேட்டா அனாலிடிக்ஸ் போன்ற துறை சார்ந்த அறிவினையும் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.

இதுதவிர, ஆடிட்டிங், நிறுவன மேலாண்மை தொடர்பான விஷயங்களையும் கற்று வைத்திருந்தால், வேலையில் முன்னுரிமை பெறுவது சுலபமான விஷயமாக இருக்கும்.

என்னதான் அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை வர்த்தக ரீதியில் செயல்படுத்தி வெற்றி காண வர்த்தகப் படிப்பு படித்தவர்கள் தேவை.

இனிவரும் காலம் வர்த்தகர்களுக்கான காலம் என்பதால், வர்த்தகக் கலைப் படிப்புகளைத் தாராளமாகப் படித்து வேலை பெறலாம்!

🔹 மீன்வளப் பொறியியல்

மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப் பலரும் அறிந்த பொறியியல் படிப்புகள் ஒருபக்கம் இருக்க, மீன்வளப் பொறியியல் போன்ற பலரும் அறியாத பொறியியல் பாடப்பிரிவுகள் நிறையவே உள்ளன. பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கும் பிரிவும் நல்ல கல்லூரியும் அவசியம்.

மீன்வளத்துறை சார்ந்து மீன்வளப் பொறியியல் நான்காண்டு படிப்பு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பொறியியல் கல்லூரி நாகப்பட்டினத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 35 இடங்கள் சேர்க்கைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத் துறைக்குத் தேவையான பொறியாளர்களைத் தயார் செய்வதற்குத்தான் இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வருடப் பட்டப்படிப்பாக வழங்கப்படுகிற இதில் மீன் வளர்ப்பு, மீன் உணவு தயாரிப்பு மற்றும் மீன் வளர்ச்சி சார்ந்த பொறியியல் கல்வியை வழங்குவதுதான் நோக்கம்.

மீன் வளர்ப்பு மற்றும் நீர்வாழ்ச் சுற்றுச்சூழலை ஆய்வு செய்தல், குளங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், பண்ணை அமைப்பு, மீன் பதப்படுத்தும் இயந்திரங்களை வடிவமைத்தல், உறைவிப்பான் கருவிகள், குளிர்பதன சேமிப்புச் சாதனங்கள் மற்றும் கட்டமைப்புகள், மீன்வளர்ப்புக்கானச் சாதனங்களை வடிவமைத்தல், மீன்பிடித்தல் துறையில் கணினி அறிவியல் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி இந்த படிப்பினைப் படிப்பதன்மூலம் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும். கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் அதிக கொழுப்பு கொண்டிருப்பதால், பலரும் இப்போது மீன் உணவினைச் சாப்பிட விரும்புகிறார்கள். எனவே, எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பினைத் தரும் படிப்பாக இது இருக்கிறது.

🔹 மருத்துவப் படிப்புகள்

மனிதர்களுக்கு வரும் நோய் களைக் குணப்படுத்தும் மருத்துவப் படிப்புக்கு என்றுமே தனி மவுசு உண்டு. காரணம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகேற்ப புதுப்புது நோய்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. இந்த நோய் களைத் தீர்க்கும் மருத்துவர்களின் தேவையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போதைய சூழலில், மருத்துவத்துறையில் தனிப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் அதிகரித்து வருகின்றனர். ரோபாட்டிக்ஸ், ரோபாட்டிக் சர்ஜரி, ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ், முதலிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும்பட்சத்தில் மருத்துவப் படிப்பு படித்தவர்களுக்கு இனி சிறப்பான வரவேற்பு கிடைக்கும். கால்நடைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இனிவரும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

🔹 கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்

ஐ.டி துறை சரிந்துவருகிறது என்று மக்கள் தவறாகப் புரிந்துவைத்திருக்கின்றனர். சர்வதேசப் பொருளாதார வளர்ச்சி கொஞ்சம் சுணக்கம் கண்டிருப்பதினால், ஐ.டி துறையின் வளர்ச்சி கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

பொறியியல் துறையை எடுத்துக்கொண்டால், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொறியியல் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. பொறியாளர் களுக்கான தேவை என்றுமே அதிக அளவில் உள்ளன. ஐ.டி தொழில்நுட்பத்தின் தேவை குறிப்பிட்ட சில பிரிவுகள் என்றில்லாமல், இன்று அனைத்துத் துறைகளிலும் உள்ளது.

ஆனால், புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி பாடத்திட்டத்தில் அதிக அளவில் இல்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு இன்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இன்னும் நான்கு ஆண்டுகளில் சூரிய சக்தி சார்ந்து அரசும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. ஆனால், அதற்கான தொழில்நுட்பத் தேவைகள் தற்போதுள்ள பொறியியல் பாடத்திட்டத்தில் இல்லை. பாடத்திட்டங்களைத் தாண்டி இதற்கான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பொறியியல் படித்தவர்கள் வெறும் படிப்புடன் நின்றுவிடாமல், படிக்கிற காலத்திலேயே ஏதாவது ஒரு நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற்றால், வேலை நிச்சயம் கிடைக்கும்.

🔹 தாவரவியல் மற்றும் விலங்கியல்

பலராலும் கவனம் பெறாத படிப்பாக உள்ளது இளங்கலை மூன்றாண்டு படிப்பான தாவரவியல் மற்றும் விலங்கியல். மருத்துவப் படிப்புகளுக்கான அடிப்படை பள்ளிகளில் படிக்கிற தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகள்தாம். இன்று தனியார் கல்லூரிகள் அதிக அளவில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளை வழங்குவதில்லை. இதனால் பள்ளிகளில் இந்தப் படிப்புகளைக் கற்றுத் தருவதற்கான ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர்களுக்கு 40% பற்றாக்குறை இருக்கும் என்கிறது ஒரு சர்வே. இதனால் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகளைப் படித்தால் எதிர்காலத்தில் குறைந்தபட்சம் ஆசிரியர் வேலை கிடைப்பது உறுதி!

🔹 வெளிநாட்டு மொழிகள்

இன்றைக்கு உலகமே ஒரு பெரிய நகரமாகி விட்டது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் சென்று வேலை பார்ப்பதில் தொடங்கி, பிறந்த நாட்டில் இருந்தபடியே உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பணியாற்றுவது சாதாரண விஷயமாகிவிட்டது.இந்த நிலையில், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிப் படிப்பினைப் படித்தவர்களுக்கு இனிவரும் நாள்களில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை.

தவிர, உலக மொழிகள் என்றாலே, பலரும் ஐரோப்பிய மொழிகளையே உலக மொழிகளாக நினைக்கின்றனர். ஆனால், ஜாப்பனிஷ், சைனீஷ், கொரிய மொழிகளுக்குமான முக்கியத்துவம் வேகமாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஜப்பானில் இளவயது கொண்டவர்களின் மக்கள் தொகை குறைந்துவருகிறது. இந்த நிலையில், எந்தப் படிப்பு படித்திருந்தாலும் ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால், அவர்களுக்கு அங்கு உடனடியாக வேலை கிடைக்கும் நிலை உள்ளது.

முன்பெல்லாம் மொழிப்படிப்பு படித்தவர்கள் ஆசிரியப் பணி ஒன்றையே முதன்மையாக நம்பியிருந்தனர். ஆனால், இன்றோ ஆசிரியர் பணியைத் தவிர்த்து சுற்றுலா, வர்த்தக நிறுவனம், சேவைத் துறை, விளம்பரத் துறை, லாஜிஸ்ட்டிக் துறை, ஆன்லைன் வர்த்தகம் எனப் பலவிதமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

மேலும், டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சியும் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஊடகங்களுக்குத் தேவையான விஷயங்களை (content) எழுதித் தருவதற்கு மொழி தெரிந்தவர்களின் உதவி பெருந்தேவையாக இருக்கிறது. ஒரு மொழியில் உள்ள செய்திகளையும் தகவல்களையும் இன்னொரு மொழியில் மாற்றித் தரவேண்டிய தேவையும் இருப்பதால், தாய்மொழியுடன் ஆங்கிலம் அல்லது வேறு ஏதாவது ஒரு உலக மொழியைத் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது!

🔹 கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு

எல்லோருக்கும் தெரிந்த படிப்புதான் கணிதம் என்றாலும் இன்றைக்கு கம்ப்யூட்டர் துறை மற்றும் நிதி சார்ந்த துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றனர் கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பினைப் படித்த மாணவர்கள்.

ஆசிரியர் பணி என்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பினைத் தாண்டி, டேட்டா அனாலிட்டிக்ஸ், இன்ஷூரன்ஸ் துறைக்கு அடிப்படையாக இருக்கும் ஆக்சூவரி (Actuary) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

முன்பு எல்லா விஷயங்களும் மொழி அடிப்படையில் தியரியாகவே சொல்லப்பட்டன. ஆனால், இன்றோ எல்லா விஷயங்களும் எண்களாக மாற்றப்பட்டு, மக்களுக்குத் துல்லியமாக எடுத்துச் சொல்லப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சியாக இருந்தாலும் சரி, ஒரு நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடாக இருந்தாலும் சரி, அது தொடர்பான கணக்குகள் அனைத்தும் புள்ளிவிவரங்களாக மாற்றிச் சொல்லவேண்டிய நிலையே இருக்கிறது. இதற்குக் கணிதம் மற்றும் புள்ளிவிவரப் படிப்பு படித்தவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.

வெறும் கணிதப் படிப்பு என்பதுடன் நின்றுவிடாமல், பைதான், ஆர் புரோக்ராமிங் லாங்குவேஜ் போன்ற கம்ப்யூட்டர் மொழிகளையும் கற்று வைத்திருந்தால், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கணிதம் படித்தவர்கள் அக்கவுன்டிங், பேலன்ஸ்ஷீட்டை ஆராய்வது போன்ற விஷயங்களையும் தெரிந்துவைத்திருப்பது வர்த்தக நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற உதவியாக இருக்கும். பங்குகளை அலசுவது போன்ற வேலைகளை கணிதம் மற்றும் புள்ளிவிவரப் படிப்புகளைப் படித்தவர்கள் சிறப்பாகச் செய்ய முடியும். எனவே, இந்த விஷயங்களையும் கற்று வைத்திருப்பது அவசியம்.

இளங்கலை கணிதப்படிப்பு படித்தாலே நல்ல வேலை கிடைக்கும் என்கிறபோது, முதுகலை கணிதப் படிப்பினைப் படித்தவர்களுக்கான வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அடுத்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்பினைத் தரும் படிப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டோம். இதிலிருந்து உங்களுக்கேற்ற படிப்பாக எதனைத் தேர்வுசெய்வது என்பதை நீங்களே நன்கு யோசித்து முடிவு செய்து கொள்ளலாம்!

ஜெய் பிரகாஷ் காந்தி
நன்றி: விகடன்

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...